நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை பலமணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
நாமகிரிப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில்18 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சிக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் குப்பைக் கிடங்கில் கொட்டிவருகின்றனர். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளையும் இங்கு கொட்டிவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அந்தக் குப்பைக் கிடங்கு தீப்பற்றி எரிந்தது. சுற்றுப்புறப் பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டதால், அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க சுமார் 3 மணி நேரம் போராடினர். பின்னர் நீண்ட நேரத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.