ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை 5 மணி முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. வடை மாலை அலங்காரத்தைத் தொடர்ந்து சுவாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும் துளசி, கதம்பம், மரிக்கொழுந்து, செவ்வந்தி, சாமந்தி, ரோஜா, சம்பங்கி உள்பட பல்வேறு மலர்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தங்க கவசத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
அதேபோல், நாமக்கல் நரசிம்மர் கோயில், ரெங்கநாதர் கோயில், பலப்பட்டறை மாரியம்மன், பாலதண்டாயுதபாணி கோயில், மோகனூர் அசல தீபேஸ்வரர் கோயில், கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில், நாவலடியான் கோயில், சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோயில் மற்றும் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மேலும் ராசிபுரம், பொன் வரதராஜ பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில், மாரியம்மன் கோயில், மெட்டாலா ஆஞ்சநேயர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், கைலாசநாதர் கோயில், வையப்பமலை பாலசுப்ரமணி கோயில், பள்ளிபாளையம் கண்ணணூர் மாரியம்மன் கோயில், கொங்கு திருப்பதி, முருகன் கோயில், குமாரபாளையம் காளியம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், அம்மன் நகர் ஐயப்பன் கோயில், ராமர் கோயில், பாண்டுரங்கர் கோயில், பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் கோயில், பாண்டமங்கலம் வெங்கட்ரமண பெருமாள் கோயில், கபிலர்மலை பாலசுப்ரமணியர் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன.