காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர் கைது

வாழப்பாடி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக இருவரை கைது செய்த வாழப்பாடி வனத் துறையினர், அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை அபராதமாக வசூலித்தனர்


வாழப்பாடி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக இருவரை கைது செய்த வாழப்பாடி வனத் துறையினர், அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை அபராதமாக வசூலித்தனர்.
வாழப்பாடி வனச் சரகத்துக்குள்பட்ட வனப் பகுதியில், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதாக சேலம் மாவட்ட வன அலுவலர் ஆ.பெரியசாமிக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, வாழப்பாடி வனச்சரகர் து.பரமசிவம் தலைமையில், வனவர்கள் பா.குமரேசன் மற்றும் வனக் காப்பாளர்கள் ஆ.மாணிக்கம், து.ஜெயக்குமார், மூ.ஜெயராமன் மற்றும் தோட்டக் காவலர்கள் ஆ.நடேசன், சு.நாராயணசாமி, ரா.முத்தையன் உள்ளிட்ட வனத்துறையினர், விளாம்பட்டி வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வனப் பகுதியில் வலைவிரித்து காட்டுப்பன்றி ஒன்றை பிடித்து தீயில் கருக்கி இறைச்சி எடுத்துக்கொண்டிருந்த சேர்வராயன் மலை ஏற்காடு நார்த்தன் காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், அருணகிரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மாவட்ட வன அலுவலர் பெரியசாமி உத்தரவின் பேரில், இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
வாழப்பாடி வனத்துறைக்குள்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயற்சிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென வாழப்பாடி வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com