முதல்வர் பொது நிவாரண நிதி: 2 பேருக்கு நிதியுதவி
முதல்வர் பொதுநிவாரண நிதியிலிருந்து 2 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.3.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை
நடைபெற்றது.
இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்த மொத்தம் 233 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட அரசுத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், சேந்தமங்கலம் வட்டத்துக்குள்பட்ட என்.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள காளிசெட்டிபட்டி புதூரைச் சேர்ந்த சரோஜா என்பவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததையடுத்து, அவரது மகன் ராஜபூபாலனுக்கு முதல்வரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.
இதுபோல், திருச்செங்கோடு வட்டத்துக்குள்பட்ட 48 கைலாசம்பாளையம் கிராமத்தில் உள்ள நெசவாளர் காலனியைச் சேர்ந்த சிவபாலாஜி என்பவர் ஜேடர்பாளையம் அருகில் காவேரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து, அவரது தாய் பாக்கியலட்சுமிக்கு முதல்வர் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.3,573 வீதம் ரூ.35,730 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும் ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் மு.துரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெ.தேவிகாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.