நெகிழிப் பயன்பாட்டுக்கு அரசு முற்றிலுமாக தடை விதித்துள்ள நிலையில், நாமக்கல்லை சேர்ந்த இறைச்சிக் கடையில் டிபன் பாக்ஸ்சில் இறைச்சியை வழங்கும் முயற்சியை கடை உரிமையாளர் தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் நெகிழிப் பயன்பாட்டுக்கு கடந்த 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹோட்டல்கள், மளிகைக் கடைகளில் துணிப் பைகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், நாமக்கல் கோட்டை சாலையில் இறைச்சிக் கடை வைத்துள்ள புவனேஸ்வரன் என்பவர் நெகிழிப் பைக்கு மாற்றாக டிபன் பாக்ஸ்சில் இறைச்சியை கொடுத்து வருகிறார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது, நெகிழி தடைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை தொடங்கியுள்ளேன். என்னிடம் இறைச்சி வாங்க தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். நெகிழி தடையால் புதிதாக டிபன் பாக்ஸ்களை வாங்கி அதில் இறைச்சியைக் கொடுக்கிறேன். ஒரு டிபன் பாக்ஸ்க்கு ரூ.50 கூடுதலாக வசூல் செய்கிறேன். அந்த டிபன் பாக்ஸை திருப்பி கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இதனால் மறு முறை வருபவர்கள் பாத்திரத்தை எடுத்து வர தொடங்கியுள்ளனர் என்றார்.