தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்க வேண்டும் என ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் ஆ.நாகராசன் தலைமையில் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொதுச்செயலர் ச.சு.ஆனந்தன், பொருளாளர் சுப்பிரமணி ஆகியோர் பேசினர். மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தாழ்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அருந்ததியர், பழங்குடியின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவைகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள், தமிழக பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர் நியமனங்களில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் விவசாய நிலம், வீடற்ற மக்களுக்கு மனையிடம் 5 சென்ட் வழங்க வேண்டும்.
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரருக்கு மணிமண்டபம், வேலுநாச்சியாரின் படைத்தளபதி குயிலிக்கு நினைவுச் சின்னம் அமைத்தது போல், மதுரையைக் காத்த மதுரைவீரனுக்கு மதுரையில் முழுஉருவ வெண்கலச் சிலையும், திருச்சியில் மணிமண்டபமும் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.