ராசிபுரம் வட்டாரத்தில் நடப்பு ரபி பருவத்தில் பயிர் செய்துள்ள சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை பயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து வறட்சி, மழை சேதங்களால் ஏற்படும் மகசூல் இழப்பீட்டுக்கு ஏற்றவாறு இழப்பீட்டுத் தொகை பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் என ராசிபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ராசிபுரம் வட்டார வேளாண் துறை உதவி இயக்குநர் து.ராஜகோபால், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் சேர்த்துக் கொள்ளப்படுவர். பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு பொதுசேவை மையங்களில் பிரீமியத்தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். ஏக்கருக்கு மக்காச்சோள பயிருக்கு ரூ.430, சோளம்- ரூ.197, பயறுவகை - ரூ.212, நிலக்கடலை - ரூ.346 பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்யலாம். பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களான முன்மொழிப் படிவம், சிட்டா, ஆதார் அட்டை நகல், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக முதல்பக்க நகல் போன்றவை கொடுத்து காப்பீடு செய்து கொள்ளலாம்.