நீதிமன்ற உத்தரவின்படி காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி செவிலியர்கள் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மா.விஜயக்குமார் தலைமை வகித்தார். நீதிமன்ற உத்தரவின்படி, காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். அனைத்து பெண் செவிலியர்களுக்கும் ஏற்புடைய சீருடையான சுடிதார் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இட மாறுதல் கலந்தாய்வில் பங்கு பெற்று 8 மாதங்களாகியும் பணியில் இருந்து விடுவிக்கப்படாத செவிலியர்களை இழுத்தடிப்பு செய்யாமல் விடுவிக்க வேண்டும். எம்ஆர்பி செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் அரசு ஊழியர் சங்க நாமக்கல் மாவட்டச் செயலர் முருகேசன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் மாதேஸ், பொது சுகாதாரத்துறை அலுவலக சங்க மாவட்டச் செயலர் இளவேந்தன் ஆகியோர் பேசினர். இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த எம்ஆர்பி செவிலியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.