கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த கொசுவர்த்தி சுருளில் இருந்த தீ கட்டிலில் இருந்த மெத்தை மீது பரவியதில் அதில் உறங்கிக் கொண்டிருந்த கால்நடைத் துறை ஊழியர் தீயில் கருகி உயிரிழந்தார்.
நாமக்கல் அருகே ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (57). இவர் அணியாபுரம் கால்நடை மருந்தகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் மதுப்பழக்கம் உடையவர் எனக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை இரவு கயிற்று கட்டிலில் மெத்தை விரித்து படுத்த கிருஷ்ணமூர்த்தி, கட்டிலுக்கு அடியில் கொசுவர்த்தி சுருளை எரியவிட்டு இருந்தார். அதில் இருந்து வெளியான தீ மெத்தையில் பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் கிருஷ்ணமூர்த்தி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.