உட்பிரிவு பட்டா மாற்ற பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரை தேவை என்பதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் யூனியன் நாமக்கல் மாவட்டக் கிளை சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.நடராஜன் தலைமை வகித்தார். செயலர் வி.சிவசங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். குறுவட்ட அளவர் நா.செந்தில்குமார் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் முருகேசன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் உட்பிரிவு பட்டா மாற்றப் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரை தேவை என்பதை ரத்து செய்ய வேண்டும். நகர்ப்புறத்தில் முழுப்புல பட்டா மாறுதலை சார்- ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் முறையை, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாற்றும் முறையைக் கைவிட வேண்டும்.
சென்னையில் கூடுதல் இயக்குநர் பதவியை உரிய அலுவலருக்கு வழங்க வேண்டும். 2017-18 ஆம் ஆண்டுக்கான துணை ஆய்வாளர் பட்டியலை முறைப்படுத்த வேண்டும். குறுவட்ட அளவர்கள், மேல்நிலை அலுவலர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த நில அளவை அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.