செம்பருத்தி, நெல்லிக்காய், முடக்கத்தான் மற்றும் தூதுவளை போன்ற மூலிகைத் தாவரங்களிலிருந்து, மூலிகை ரசம் உள்ளிட்ட உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் செய்முறை விளக்க மூலிகைத் தாவரப் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரியார் பல்கலைக்கழகத் தாவரவியல் துறை சார்பில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தொடங்கி வைத்தார்.
விழாவில் தலைமையுரையாற்றிய பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் "பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்கள் தங்கள் ஆய்வுக்கு நெருக்கமான துறைகளுடன் இணைந்து கூட்டாய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் ஆய்வுக்கான தலைப்புகளைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.ஆய்வு மாணவர்கள் கடுமையாக உழைத்து மக்களுக்கு பயன்படும் வகையிலான ஆய்வு முடிவுகளை அளிக்க வேண்டும். அதேபோல, தரமான ஆய்விதழ்களில் தங்களுடைய கட்டுரைகளை வெளியிட வேண்டும்.பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பில் பதிவு செய்யும் மாணவர்கள் குறிப்பிட்ட கால அளவான மூன்று ஆண்டுக்குள் ஆய்வேட்டை சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் ஆய்வேட்டை சமர்ப்பித்த ஆறு மாத காலத்துக்குள் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு நடைபெறுவதை உறுதி செய்வதற்கான நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வு மாணவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள் முழுமையாக உருவாக்கித் தரப்படும்.இங்கு பன்னாட்டு அளவில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்கள் உள்ளனர். அவர்களின் அறிவுத் திறனை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
மூலிகை ஆய்வியல் நிபுணர் முனைவர் டி.தட்சிணாமூர்த்தி மாணவ-மாணவியருக்கு மூலிகைகள் குறித்தும், அவற்றில் இருந்து பல்வேறு உடல்நலன் சார்ந்த பொருள்கள் தயாரிப்பது குறித்து பயிற்சியளித்தார்.
இந்தப் பயிலரங்கில் தாவரவியல் துறைத் தலைவர் கே.செல்வம் வரவேற்றார். பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் எஸ். முருகேசன் நன்றி கூறினார். விழாவில் உதவிப் பேராசிரியர்கள் எஸ்.லலிதா, டி.அருள் பாலச்சந்திரன், ஏ.மருதுபாண்டியன் மற்றும் திருச்சி,தருமபுரி,கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.