விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் கணினி அறிவியல் கணினி பயன்பாட்டியல், தமிழ் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து இரண்டு நாள் தேசியத் தொழில்நுட்பக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்சயம் 2019 என்ற தலைப்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கில், மாணவர்களின் துறை அறிவை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் , மென்பொருள் உருவாக்கம் , கணினி வடிவமைப்பு, மின் கழிவு மேலாண்மை போன்ற தலைப்புகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கல்லுரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் நாமக்கல் மாவட்ட வன அலுவலர்.ஆர்.காஞ்சனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார் . மாணவர்கள் பொது அறிவையும் சமகால நிகழ்வுகள் குறித்த அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதற்கு மாணவர்கள் விழிப்புடன் தொண்டாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். கணினி அறிவியல் பயிலும் மாணவர்கள் மின் கழிவுகளை மேலாண்மை செய்யும் வழிமுறைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். வனப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இக் கருத்தரங்கிற்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளரும் செயலருமான,மு.கருணாநிதி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். மூன்றாம் ஆண்டு கணினியியல் மாணவி ஏஞ்சல் மேரி வரவேற்புரை ஆற்றினார். முதுகலை கணினியியல் மாணவி சூர்யா கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், அட்மிசன் இயக்குநர் வரதராஜு, கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார்,கணினி அறிவியல் , கணினிப் பயன்பாட்டியல் மற்றும் தமிழ்த் துறையின் புல முதன்மையர் முனைவர்.அருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
துறைத் தலைவரகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மூன்றாம் ஆண்டு கணினியியல் மாணவி பிர்தௌஸ் நன்றி கூறினார்.