ராசிபுரம் அருகே ஆர். பட்டணம் பேரூராட்சி பகுதியில் புதிய மதுபானக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் சனிக்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டம்நடத்தினர்.
ஆர்.பட்டணம் 4-ஆவது வார்டு பகுதியில் பிரதான சாலையில் கால்நடை மருத்துவமனை, நூலகம், சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி போன்றவை உள்ளன. இதற்கு மிக அருகாமையில், புதிதாக மதுபான கடை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதை அறிந்து அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந் நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதையடுத்து, திரளான பெண்களும், பொதுமக்களும் ஒன்று திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் போக்குவரத்துப் பாதித்தது.
இதையடுத்து தகவல் அறிந்து அப் பகுதிக்கு வந்த ராசிபுரம் காவல் துறை டிஎஸ்பி ஆர். விஜயராகவன், உதவி ஆய்வாளர் பூபதி ஆகியோர் பொதுமக்களை சமரசப்படுத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட துறையினருடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் அப் பகுதியில் கடை அமைக்கும் பணியை நிறுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். மறியலால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்கு வரத்துப் பாதிக்கப்பட்டது.