கல்வி மூலம் மாணவர்கள் எதிர்கால சமுதாயத்துக்கு சேவையாற்றிட வேண்டும் என்றார் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பி. குழந்தைவேல்.
நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் பொ. செல்வராஜ் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர் ஜெயம் செல்வராஜ், செயலர் கவீத்ரா நந்தினிபாபு, நிர்வாக இயக்குநர் கே.எஸ். அருள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ந.ராஜவேல் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி. குழந்தைவேல் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டமளித்துப் பேசியது: வாழ்க்கையில் கடவுளாக இருக்கும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை எப்போதும் மறக்கக் கூடாது. பட்டம் பெறுவது கற்றலுக்கான முடிவல்ல, ஆரம்பமே. இப்போது பெற்றுள்ள பட்டம் மூலம் எதிர்கால சமுதாயத்துக்கு சேவையாற்றிட மாணவர்கள் உறுதி பூண்டிட வேண்டும் என்றார். விழாவில் 465 இளங்கலை மாணவர்கள், 140 முதுகலை மாணவர்கள், 80 எம்.பில் மாணாக்கர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் ந. ராஜவேல், நிர்வாக இயக்குநர் கே.எஸ்.அருள்சாமி, துணை முதல்வர்கள் கே.கே. கவிதா, ப. தாமரைச்செல்வன், கி. குணசேகரன் புல முதன்மையர்கள் ஆ. எழிலரசு, செ. பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் மாணவர்கள், சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுதல், உயர் கல்வி ஆகியவை குறித்து கலந்தாலோசித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.