நல்லூர் அருகே லாரி மோதி முதியவர் பலியானது குறித்து நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து லாரியின் ஓட்டுநரைக் கைது
செய்தனர்.
திருச்செங்கோடு காந்தி கிராமம் நல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காளியண்ணன் (70) விவசாயி. இவர், சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் நல்லூர் கந்தம்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கந்தம்பாளையம் பிரிவு சாலை அருகே சாலையைக் கடக்க முயன்றபோது திருச்செங்கோட்டிலிருந்து பரமத்தி நோக்கி சாம்பல் பாரம் ஏற்றிவந்த லாரி, காளியண்ணன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த காளியண்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகேசனை (40) கைது செய்தனர்.