25 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கல்லூரி மாணவர் புகார்

கோயில் பிரச்னை தொடர்பாக தனது தாத்தா காலத்திலிருந்து தங்களது குடும்பத்தை 25 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கல்லூரி மாணவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

கோயில் பிரச்னை தொடர்பாக தனது தாத்தா காலத்திலிருந்து தங்களது குடும்பத்தை 25 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கல்லூரி மாணவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நெ.3 கொமாராபாளையம் அருகே பொன்பரப்பிப்பட்டி காலனியைச் சேர்ந்த ஆர். லோகேஸ்வரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த எங்கள் குடும்பத்தை அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். எங்களது தாத்தா காலத்தில் கோயில் நிர்வாகம் தொடர்பான பிரச்னையில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
இதனால் கடந்த 25 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளோம். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கோயிலில் வழிபட,  கடைகளில் பொருள்கள் வாங்க, பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க அனுமதிப்பதில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தக் காலனியில் எங்களுடன் பேசுபவர்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவோம் என சிலர் மிரட்டுகின்றனர்.
இதனால் தினமும் பல்வேறு அவமானங்களை சந்திக்க நேரிடுகிறது. கல்லூரியில் படிக்கும் நானும், சகோதரியும் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் எங்கள் குடும்பத்தை 25 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கிராமத்தில் இயல்பான வாழ்க்கை வாழ ஆட்சியர் உதவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com