ராசிபுரம் நகரில் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, ரொக்கம் ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ராசிபுரம் வி. நகர் 7-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் (56). காரைக்குறிச்சிப் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
இந்த நிலையில், இவர்கள் சென்னையில் எம்.பி.பி.எஸ். பயின்று வரும் மகள் கோகிலா ஸ்ரீ-யை பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை ஊர் திரும்பியுள்ளனர். வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த நகை, மோதிரம் என 6 பவுன் நகைகள் திருடு போயின. மேலும் பீரோவிலிருந்து ரொக்கம் ரூ. 30 ஆயிரம் திருடப்பட்டது.
இதையடுத்து காவல் துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து ராசிபுரம் டிஎஸ்பி. ஆர்.விஜயராகவன், உதவி ஆய்வாளர் டி. பூபதி ஆகியோர் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினர்.