பரமத்தி வேலூர் காவிரி பாலத்துக்கு கீழ் அமர்ந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த தொழிலாளி, தவறி காவிரி ஆற்றில் விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தைச் சேர்ந்த குருசாமி மகன் தங்கவேல் (55), கூலித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை காவிரி ஆற்றுப்பாலத்துக்கு கீழ் அமர்ந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக காவிரி ஆற்றில் தவறி விழுந்ததில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீஸார் மீனவர்கள் உதவியுடன் பரிசல் மூலம் தேடி வந்தனர். இந்த நிலையில், புதன்கிழமை மாலை பாலப்பட்டி அருகே உள்ள களிமேடு பகுதி காவிரி ஆற்றில் மிதந்து வந்த தங்கவேலின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.