பரமத்தி வேலூர் வட்டம்,சோழசிராமணி அருகே சோளக்காட்டில் கிளிகளை வேட்டையாடி வீட்டில் அடைத்து வைத்திருந்தவரிடம் இருந்து 22 கிளிகளை மீட்டு, அவருக்கு அபராதம் விதித்து வனத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணி பகுதியைச் சேர்ந்த குமார் (50), விவசாயி. இவர் அங்குள்ள சோளக்காட்டில் கிளிகளை வேட்டையாடி விற்பனை செய்து வருவதாக மாவட்ட வன அலுவலர் காஞ்சனாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அவரது உத்தரவின்படி நாமக்கல் வனச்சரகர் ரவிச்சந்திரன், வனபாதுகாப்பு படை வனச்சரகர் பழனிசாமி மற்றும் வனத் துறையினர் குமாரின் வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு 22 கிளிகளை கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 22 கிளிகளையும் மீட்ட வனத் துறையினர், குமாரை நாமக்கல் வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, வன உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவருக்கு ரூ.2,500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட கிளிகளை காட்டுப் பகுதியில் பறக்க விட்டனர்.