பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலர் சக்தி தலைமை வகித்தார். செயலர் பிரபாகரன், கோரிக்கை குறித்து பேசினார். அதில், மத்திய, மாநில அரசுகள் அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட வேண்டும். உடனடியாக அனைத்து மாணவர்களுக்கும் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். மூடப்பட்ட அரசுப் பள்ளிகளை திறக்க வேண்டும். அரசாணைபடி, அனைத்து அரசுப் பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும்.
மாணவியர், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுக்க குழுக்களை அமைத்து, முறையாக கல்வி வளாகங்களில் செயல்படுத்த வேண்டும். அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு முதல்வர் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாமக்கல் மாவட்ட இந்திய மாணவர்கள் சங்க செயலர் சரவணன் தலைமை வகித்தார்.