நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 11) நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாகச் சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
ஜனவரி மாதத்துக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு விற்பனையாளர், விற்பனைப் பிரதிநிதி, மேற்பார்வையாளர், மேலாளர், கணினி இயக்குபவர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பள்ளிப் படிப்பு முடித்த ஆண், பெண் தேவைப்படுகின்றனர். மேலும், அனைத்துவித கல்வித் தகுதிக்கும் ஆள்கள் தேவை என தனியார் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எனவே, இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் வரும் 11-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.