புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியை அடுத்த தேவராயபுரத்தை சேர்ந்த மகேஷ் மகன் அருண்குமார் (23), மணி மகன் பிரவின்குமார் (19), இருவரும் கடந்த 31-ஆம் தேதி இரவு ராஜவீதியில் புத்தாண்டை கொண்டாடினர். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் 17 வயது மகன், போஜராஜன் மகன் செல்வகுமார் (20) ஆகியோருடன் வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த செல்வகுமார் மற்றும் 17 வயது சிறுவனும் சேர்ந்து அருண்குமார், பிரவின்குமார் இருவரையும் கட்டையால் தாக்கியுள்ளனர். அதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக பிரவின்குமார் சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தார்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன், பரமத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், செல்வக்குமார் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். தற்போது பிரவின்குமார் உயிரிழந்தால், எருமப்பட்டி போலீஸார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.