மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் மாவட்ட பெண் காவலர்களை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பாராட்டினார்.
37-ஆவது மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ஆனந்த லட்சுமி 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், வெண்ணந்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ரா.அமுதா தட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் அருள்மொழி உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், நீளம் தாண்டுதலில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.
காவல் உதவி ஆய்வாளர் ஆனந்த லட்சுமி மற்றும் காவலர் அருள்மொழி ஆகியோர் ஆந்திர மாநிலம், குண்டூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். பதக்கம் வென்ற காவலர்களை நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பாராட்டினார்.