கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடர்பாக திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் வியாழக்கிழமை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
இந்த வழக்கில் கோகுல்ராஜ் தாய், அவரது சகோதரர் மற்றும் கல்லூரி தோழி உள்பட 7 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. கோகுல்ராஜின் தாயார் சித்ரா, அண்ணன் கலைச்செல்வன், கோகுல்ராஜ் கல்லூரித் தோழி சுவாதி, அவரது தாயார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் உள்பட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். தொடர்ந்து திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது சம்பவம் தொடர்பாக காவல் துறையால் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மணிவண்ணன் அடையாளம் காட்டினார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஜன. 11) ஒத்தி வைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார். கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணனிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. இதனிடையே இந்த வழக்கில் ஏற்கெனவே சாட்சியம் அளித்த கோகுல்ராஜின் தாய் சித்ரா, அவரது அண்ணன் கலைச்செல்வன், கல்லூரித் தோழி சுவாதி உள்ளிட்ட 7 பேரிடம் வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த அரசு தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.