நெகிழி தடை எதிரொலி: வாழை இலை விற்பனை அதிகரிப்பு

நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் பகுதியில் வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் உயர்ந்துள்ளது.

நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் பகுதியில் வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் உயர்ந்துள்ளது.
நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில் கடந்த 10 நாள்களில் அதன் பயன்பாடும் பெருமளவில் குறைந்துள்ளது.
நெகிழிப் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை சிறியது, பெரியது என சுமார் 2,000-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன.
நெகிழி தடையால் இப்போது இறைச்சிக் கடைகளில் நகரப் பகுதிகளில் அதன் பயன்பாடு முற்றிலுமாகவும், கிராமப் பகுதிகளில் 50 சதவீதம் அளவுக்கும் குறைந்துவிட்டன. 
ஹோட்டல்களில் பாத்திரங்கள் கொண்டு வந்து சாப்பாடு உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்லுங்கள் என்று அறிவிப்பு பலகையில் எழுதி வைத்துள்ளனர்.
பூ வியாபாரிகள் பக்தர்களுக்கு பூக்களை நெகிழி பைகளில் போட்டு கொடுத்து வந்தனர். இப்போது இவர்களும் வாழை இலைக்கு மாறிவிட்டனர். இதனால் கோயில் வளாக பகுதிகளில் இந்த வகையிலான குப்பைகளை இப்போது காண இயலவில்லை. இப்படியாக பாரம்பரியமிக்க வாழை இலைக்கு தனி மவுசு வந்து விட்டதால் அதன் விலையும் உயர்ந்து விட்டது. வழக்கமாக நாமக்கல் நகரில் 100 இலைகள் கொண்ட வாழை இலை கட்டுகளில் முன்பு 50 முதல் 100 கட்டுகள் வரையே விற்பனையாகும் நிலை இருந்தது.
ஆனால் அதன் விற்பனை அமோகமாக உயர்ந்து இப்போது சராசரியாக 200 கட்டு முதல் 250 கட்டு வரை விற்பனையாகிறது.
மேலும் விலையும் உயர்ந்து விட்டது. 5 இலைகளை கொண்ட சிறிய கட்டு ரூ.5 முதல் ரூ.10 வரை இருந்த நிலையில் இப்போது ரூ.20 ஆக உயர்ந்து இருக்கிறது. இது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய
செய்துள்ளது. பாத்திரங்கள் இருந்தால்தான் ஹோட்டல்களுக்கு செல்ல முடியும், இறைச்சி வாங்க முடியும் என்ற நிலை வந்து விட்டதால் பாத்திரக் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். பாத்திரக் கடைகளின் முன்பகுதியை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்திய பிளாஸ்டிக் பொருள்கள் எல்லாம் இப்போது கடையில் உள்பகுதிக்கு இடம் மாறிவிட்டன. அனைத்து பாத்திரக்கடைகளின் முன்பகுதியிலும் விதவிதமான எவர்சில்வர் வாளிகளை தொங்கவிட்டுள்ளனர்.  புதுமண தம்பதிக்கு பொங்கல் சீர் கொடுக்க பாத்திரம் வாங்க வருவோரில் பலர் அன்றாட பயன்பாட்டுக்கான எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கிச்செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தூக்குவாளிகள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டு இருந்த நிலையில் அவற்றின் தேவை இப்போது அத்தியாவசியமாகி விட்டது. ரூ. 55 முதல் ரூ.180 வரை பலவகையான வாளிகள் விற்பனைக்கு
வந்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com