பரமத்திவேலூர் அருகே கடந்த 2014-ஆம் ஆண்டு மது அருந்த பணம் தர மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் கணவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே மரவாபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (50) லாரி ஓட்டுநர். இவரது மனைவி சந்திரா (37). பழனிசாமி அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவி சந்திராவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19- ஆம் தேதி பழனிசாமி தனது மனைவி சந்திராவிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். சந்திரா பணம் தர மறுத்ததால் ஆவேசடைந்த பழனிசாமி சந்திராவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து சந்திரா, பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பரமத்தி போலீஸார் வழக்குப் பதிந்து பழனிசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணை பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதிகட்ட விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி அசின்பானு குற்றம்சாட்டப்பட்ட பழனிசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.