பரமத்தி வேலூரில் உள்ள வேலூர் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை வங்கி வளாகத்தில் நடைபெற்றது.
வேலூர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சக்திவேல் முகாமுக்கு தலைமை தாங்கினார். அரிமா சங்க முன்னாள் கூட்டு மாவட்டச் செயலாளர் மோகன், டாக்டர் சோமசுந்தரம், இந்தியன் வங்கி பொறியாளர் வேலுச்சாமி, வழக்குரைஞர் இளங்கோ, பரமத்தி இந்தியன் வங்கி கிளை மேலாளர் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றி வைத்துப் பேசினர்.
வேலூர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சக்திவேல் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட வங்கி வாடிக்கையாளர்களிடம் கூறியதாவது: இதர வங்கிகளின் காசோலைகள் அனைத்தும் 24 மணி நேரத்தில் வரவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை சிறப்பு கவனம் செலுத்தி தனியாக பணம் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. வாரம் முழுவதும் மற்றும் விடுமுறை நாள்களில் வங்கி வணிக தொடர்பாளர்கள் மூலம் வங்கி சேவை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. தானியங்கி இயந்திர வசதி, கணக்கு புத்தகத்தில் பதிவு செய்யும் வசதி மற்றும் கிளை வளாகத்தில் இணைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம் இயந்தரம் மூலம் 24 மணி நேரமும் பணம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள்,வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.