நாமக்கல் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.13) நடைபெறவுள்ளது. இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் கு.சின்னப்பபாரதிக்கு "மண் போற்றும் மாமனிதர்' என்ற விருது வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் தமிழ்ச் சங்க அமைப்புத் தலைவர் அரசு பரமேசுவரன் தெரிவித்தது: நாமக்கல் தமிழ்ச் சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா, இதழ் வெளியீட்டு விழா, முத்தமிழ் முழக்கம் என்ற தலைப்பில் பேச்சாளர்களின் சொற்பொழிவு என முப்பெரும் விழா நாமக்கல்-திருச்சி சாலை ஹோட்டல் கோல்டன் பேலஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாமக்கல் தமிழ்ச் சங்கத் தலைவர் மருத்துவர் ரா.குழந்தைவேல் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் நாமக்கல்லைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் கு.சின்னப்பபாரதிக்கு "மண் போற்றும் மாமனிதர்' என்ற விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு வழங்குகிறார். தொடர்ந்து நாமக்கல் தமிழோசை இதழ் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
இதையடுத்து, "தரணி போற்றும் தமிழர் வாழ்வு' என்ற தலைப்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, "நோக்கும் திசையெங்கும் நாம்' என்ற தலைப்பில் எழுத்தாளரும், வழக்குரைஞருமான சுமதி ஆகியோர் பேசுகின்றனர் என்றார்.