நாமக்கல்லை நோயற்ற முட்டை மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவு மாநில துணைத் தலைவர் டாக்டர் பி.வி.செந்தில் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத் தலைவராக நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் பி.வி.செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி ஒப்புதலின் பேரில், அகில இந்திய ஓபிசி பிரிவு தலைவர் தாமார்த்வாஜ் சாகு அவரை
நியமித்துள்ளார்.
ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவராக பதவியேற்ற அவர், வெள்ளிக்கிழமை காலை நாமக்கல் வந்தார். தனது ஆதரவாளர்களுடன் சென்று நாமக்கல் நேரு பூங்காவில் உள்ள நேரு சிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதன்பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய அளவில் ஓபிசி பிரிவினர் சுமார் 40 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் சிறு, குறுந்தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய மத்திய அரசின் அதிக வரி விதிப்பால் பல சிறு தொழில்முனைவோர் ஆன்லைன் மூலம் வரி செலுத்த தெரியாமல் தங்களின் தொழில்களை நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜிஎஸ்டி வரியை சீரமைப்புச் செய்ய வரும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அகில இந்திய அளவில் முட்டைக் கோழி வளர்ப்பு தொழிலில் முதலிடத்தில் உள்ள நாமக்கல்லை நோயற்ற முட்டை மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் சிறு தொழில்களுக்கு 112 கேவிஏ வரையே குறைந்த அழுத்த மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதை 250 கேவிஏவாக உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் நகரில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக ரிங் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ரா.செழியன், வீரப்பன், காங்கிரஸ் பிரமுகர்கள் சீனிவாசன், மோகன், மணி, செல்வகுமார், மாணிக்கம், சந்திரசேகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.