பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் பி.தங்கமணி தொடக்கிவைத்தார்.
நாமக்கல் மாவட்டம்,கொமராபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட காந்தியடிகள் தெரு, தலைமை நீரேற்று நிலைய வளாகம், சந்தைப்பேட்டை மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி, அங்காளம்மன் கோயில் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி, அரசு மருத்துவமனை வளாகம்,காளியம்மன் கோயில்,செளண்டம்மன் கோயில்,ஜே.கே.கே சாலை,பேருந்து நிலையம் மற்றும் அய்யன் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பொது மற்றும் தனியார் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.18 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் 11 தானியங்கி குடிநீர் விற்பனை மையம் அமைப்பதற்கான பூமி பூஜையை தமிழக மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தொடக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, பரமத்தி வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7,8 வார்டு மற்றும் படமுடிபாளையம் அம்மா நகர் ஆகிய பகுதிகளில் ரூ.85 லட்சம் செலவில் தார்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையையும் துவக்கி வைத்தார்.
பின்னர், வேலூர் மின் மயானத்தில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். சுந்தரம், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் பி.தங்கமணி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சுந்தரம்,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம்,திருச்செங்கோடு கோட்டாட்சியர் பாஸ்கரன்,கொமராபாளையம் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் நாகராஜன், கொமராபாளையம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) குணசேகரன்,அரசு வழக்குரைஞர் தனசேகரன்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.