இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல் ஒன்றிய செயற்குழுக் கூட்டம், ஒன்றியத் தலைவர் தா.பெ.கண்ணன் தலைமையில் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது.
ஒன்றிய பொருளாளர் நா.ஜீவாஜாய் வரவேற்றார். மாநில பொதுக் குழு உறுப்பினர் கோ.கு.ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் முருகசெல்வராசன், ஒன்றியச் செயலர் அ.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று நடைபெறும் ஆசிரியர்களுக்கான குறை தீர்க்கும் முகாமில் ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படும், விண்ணப்பங்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தீர்வு காண வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்படும் மழலையர் வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி நியமனம் செய்யும் முடிவை அரசு கைவிட வேண்டும். தமிழக அரசின் இந்த முடிவைக் கண்டித்து வரும் 18ஆம் தேதி நாமக்கல்லில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முழுமையாக பங்கேற்பது.
ஹிந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளை பள்ளிகளில் கட்டாயப்படுத்தி திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய பொதுத் தேர்வு என்னும் முடிவினை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.