வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒ.சௌதாபுரத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் இளைஞர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் ஒ.சௌதாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ரஞ்சித் தலைமை வகித்தார். கிராம நூலகத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் உருவ சிலைக்கு ஒ.சௌதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் கே.அருணாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் விவேகானந்தர் கருத்துகள், சிந்தனைகள், அமெரிக்கா நாட்டில் அவர் ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவு ஆகியவற்றை விளக்கிப் பேசினார். பின்னர் இளைஞர் தின உறுதி மொழி ஏற்றனர்.
சமூக ஆர்வலர்கள் விக்னேஷ், துரைசாமி உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவை ராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவர் சங்க நாமக்கல் கிளை செயலர் கே.அருணாசலம் செய்திருந்தார்.