நலவாரிய உறுப்பினர்கள் ஓய்வு பெறும் தகுதி வயதைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மக்கள் நல அனைத்து பொதுசேவை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயற்குழுக் கூட்டம், மாநிலச் செயலர் பா.வைத்தீஸ்வரன் தலைமையில் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட சட்ட ஆலோசகர் எஸ்.நடராஜன் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பு மாநிலத் தலைவர் வை.பாலுசாமி வரவேற்றார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தைப் பெற ஆண்களுக்கு 55 வயது எனவும், பெண்களுக்கு 50 வயது எனவும் நிர்ணயிக்க வேண்டும். தொழிலாளளர் நல வாரிய அலுவலகங்களில் பல்வேறு உதவித்தொகை கேட்டு அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும். தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினராகப் பதிவுபெற்ற கட்டுமான, அமைப்புசார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். மாதம்தோறும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தொழிலாளர் பிரதிநிதிகள் பங்கேற்கும் கண்காணிப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும்.
தொழிலாளர் அலுவலகத்தில் புதுப் பதிவு, பதிவு கேட்பு மனு, குளறுபடிகளைச் சரி செய்ய வாரம் ஒருமுறை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நல அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்.
வாரியங்கள் துவங்கப்பட்டபோது, தொழிலாளர்களின் பங்களிப்பு இருந்தது. தற்போது இலவசமாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலம் போன்று பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கு தொழிலாளியின் பங்களிப்பு கட்டாயம் என அரசு உத்தரவிட வேண்டும்.
கட்டுமானத் தொழிலாளர்களின் நலன் காக்க மத்தியிலும், மாநிலத்திலும் தனி துறை உருவாக்க வேண்டும். மேலும், ஈஎஸ்ஐ, பிஎப், ஓய்வூதியம், வீட்டு வசதி, மழைக் கால நிவாரணம் போன்றவை உள்ளடக்கிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.