ராசிபுரம் பகுதியில் பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று 5 கி.மீ. தொலைவுக்கு ஓடினர்.
ராசிபுரம் வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் 2-ம் ஆண்டாக வெற்றி மாரத்தான் -2019 என்ற தலைப்பில் ஓட்டப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்களின் உடல் திறனையும், மன வலிமையையும் மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த ஓட்டத்தில் ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் மட்டுமின்றி, சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பள்ளி மாணவ, மாணவியர் சுமார் 800 பேர் பங்கேற்றனர்.
முன்னதாக, ஆத்தூர் சாலை கொங்கு திருமண மண்படம் முன்பாக துவங்கிய மாரத்தான் ஓட்டத்தை வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் எஸ்.குணசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜி.வெற்றிசெல்வன் முன்னிலை வகித்தார். இந்த மாரத்தான் ஓட்டம் ஆத்தூர் சாலை, கோனேரிப்பட்டி, புதிய பஸ் நிலையம், கச்சேரி சாலை, நாமக்கல் சாலை வழியாக வெற்றி விகாஸ் பள்ளியை அடைந்தது.
போட்டியின் முடிவியில் ஆடவர், மகளிர் பிரிவில் முதல் 10 இடங்கள் பெற்றவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆடவர் பிரிவில் வெற்றி விகாஸ் ஆண்கள் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் கே.வி.அனிஸ் முதலிடம் பெற்று, ரூ.4 ஆயிரத்து 999 -க்கான காசோலை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. 2-ம் இடம் பெற்ற குருசாமிபாளையம் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் கே.கௌதம் ரூ.2 ஆயிரத்து 999 -க்கான காசோலை மற்றும் கோப்பை பெற்றார். இதே போல் மகளிர் பிரிவில் பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவி எஸ்.காவ்யா முதலாவதாக வந்து ரூ.4 ஆயிரத்து 999-க்கான காசோலை மற்றும் கோப்பையும், 2-வதாக வந்த அதே பள்ளி மாணவி ஏ.ஜீவிதா ரூ.2 ஆயிரத்து 999-க்கான காசோலை மற்றும் கோப்பை பெற்றார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பள்ளி நிறுவனர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்து, கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார். பள்ளித் தலைவர் ஜி.வெற்றிச்செல்வன், தாளாளர் ஜி.விஜய், செயலர் எஸ்.பாலசுப்பிரமணியம், துணைச் செயலர் ஆர்.யு.சிற்றரசன், பொருளாளர் கே.பழனிவேல், பள்ளி நிர்வாக அலுவலர்கள் என்.மாரிமுத்து, கே.சந்திரசேகரன், ஆங்கிலத் துறை இயக்குநர் வி.தாசபிரகாசம், கணிதத் துறை இயக்குநர் வி.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.