பரமத்திவேலூர் அருகே காமாட்சி நகரில் 180 பேருக்கு ரூ. 45 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் தங்கமணி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
பரமத்திவேலூர் அருகே காமாட்சி நகரில் நடைபெற்ற இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியாமரியம் தலைமை வகித்தார். மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு 37ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா இல்லாமல் காமாட்சி நகரில் வசித்து வந்த 180 பேருக்கு ரூ. 45 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும் 13 மாணவ,மாணவிகளுக்கு ரூ. 31 ஆயிரத்து 750 மதிப்பிலான கல்வி உதவித்தொகையையும் வழங்கினர்.
மேலும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கோழி அபிவிருத்தி திட்டம் 2018-19 ஊரக புழக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் பரமத்திவேலூர் தொகுதிக்குள்பட்ட ரூ. 2,500 மதிப்பிலான இரவுக்கூண்டு, நான்கு வாரம் வளர்க்கப்பட்ட ரூ. 72 மதிப்பிலான 50 கோழிக்குஞ்சுகள், கோழிவளர்ப்புப் பயிற்சி கட்டணமாக ரூ. 150 ஆகியவை சேர்த்து ஒரு பயனாளிக்கு ரூ. 6,400 மதிப்பிலான கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர். பொன்னுவேல், மோகனூர் வட்டாட்சியர் கதிர்வேல், மோகனூர் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் விஜயகுமார், மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர்கள் ராக்கியண்ணன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.