குமாரபாளையத்தில் சாயக்கழிவு நீர் கலப்பால் பொதுக் கிணற்றில் தண்ணீர் நிறம் மாறியுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குமாரபாளையம் ஜேகேகே சுந்தரம் நகரில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுக் கிணற்றில் கடந்த சில நாள்களாக தண்ணீர் நிறம் மாறி காணப்பட்டுள்ளது. மேலும், ரசாயனம் கலந்தது போன்று துர்நாற்றமும் வீசியுள்ளது. அதேபோன்று, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் குழாய்களில் தண்ணீரும் நிறம் மாறி காணப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுந்தரம் நகர் காலனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் சாயப் பட்டறைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை நேரடியாக வெளியேற்றுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக இயங்கும் சாயப்பட்டறைகளை மூட வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், சுற்றுச்சூழல் மாசடைவதோடு, நிலத்தடி நீரும் நிறம் மாறி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இந்த தண்ணீரை பயன்படுத்தும் போது தோல்நோய்கள் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தொடர் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.