திருச்செங்கோட்டில் முன்விரோதம் காரணமாக வாடகை கார் ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் சுரேஷ்குமார் (40), மனைவி சசிகலா (33), மகள் தக்சனா(12) உடன் கந்தம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.
தைப்பொங்கல் திருநாளையும், தனது மகள் பிறந்த நாளையும் கொண்டாடுவதற்காக திங்கள்கிழமை தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வசிக்கும் ஊரான அம்பேத்கர் நகருக்கு வந்துள்ளார். வீட்டில் குடும்பத்தாருடன் பொங்கல் வைத்து பூஜை செய்து விட்டு சில பொருள்களை வாங்கி வருவதற்காக தனது காரில் திருச்செங்கோடு சேலம் சாலையில் அவர் சென்றாராம். அப்போது, வேகமாக வந்த மற்றொரு காரில் வந்த கும்பல், அவரது காரை வழிமறித்து சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியதாம். இதில், சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.