அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கக் கோரி, நாமக்கல் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முதியோர் முற்றுகையிட்டு போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் இதர வகை தொழிலாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனராம்.
ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு மாதம் கூட அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.ஆயிரம் ஓய்வூதியம் வந்து சேரவில்லையாம். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நிதி வந்ததும் வழங்கப்படும் என கூறி வந்த நிலையில், மத்திய தொழிற்சங்கக் குழுவைச் சேர்ந்த மாநிலத் தலைவர் செல்வராஜ் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஓய்வூதியம் கோரி முழக்கம் எழுப்பினர். இதுகுறித்து மத்திய தொழிற்சங்க குழுவின் மாநிலத் தலைவர் செல்வராஜ் கூறியது: கடந்த நான்கு ஆண்டுகளாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த 60 வயதைக் கடந்த நெசவுத் தொழிலாளர்களுக்கு, இதுவரை வரவேண்டிய ஓய்வூதியத்தை ஒட்டு மொத்தமாக வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகிறோம்.
அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.