பெண் குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் இதர சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட சாதனைப் பெண்கள், மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜன. 24-இல் மாநில அரசின் விருது - 2019 வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு 5 வயதுக்கு மேல் 18 வயதுக்குள்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் சிறார் தொழிலாளர் ஒழிப்பு, பெண் சிறார் திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என சாதித்திருத்தல் உள்ளிட்ட சாதனை புரிந்திருந்தால் விண்ணப்பிக்கலாம். 5 வயதுக்கு மேல் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளின் பெயரை வரும் நவ. 30-ஆம் தேதிக்குள், அதற்குரிய விண்ணப்பத்தை உரிய தகவல்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலர் அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் 04286-280230-இல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.