நாமக்கல் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆகஸ்ட் 20 - ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் சென்னை, ஓய்வூதிய இயக்குநரக அலுவலர்கள் பங்கேற்று குறைகளைக் கேட்க உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைகள் ஏதேனுமிருப்பின் அது குறித்த விண்ணப்பங்களை தேவையான இணைப்புகளோடு 3 பிரதிகளில் ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்பாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்கு (கணக்குகள்) வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தில் தங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண் இருந்தால் அவற்றையும் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்பிய ஓய்வூதியர்கள், தவறாமல் கூட்ட நாளன்று கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொள்ள இயலாத ஓய்வூதியர்கள் சார்பாக யாரேனும் ஒருவர் கலந்து கொண்டு அவர்களது குறைகளை நீக்க முறையீடு செய்யலாம். மனுதாரர் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் அவரது மனுவில் கண்ட குறைகள் சரிசெய்யப்பட்டு விட்டதாகக் கருதப்படும். கடந்த முறை விண்ணப்பம் அளித்து குறைகள் தீர்வு செய்யப்படாமல் இருப்பின், தற்போது மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இக்குறைதீர் நாள் கூட்டத்துக்கு முன்னதாக ஆக.14-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) முன்பாக நடைபெறும் முன் ஆய்வுக் கூட்டத்தில் துறை அலுவலர்களோடு, நாமக்கல் மாவட்ட ஓய்வூதியர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம். இதில், ஓய்வூதியர்கள் பங்கேற்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.