நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளிலிருந்து, பாதுகாக்கும் வகையில், விழிப்புணர்வு குறும்படம், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை விடியோ வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதன்படி, புதன்கிழமை பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பகுதியில் இந்த குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த குறும்படத்தில் ஆண், பெண் குழந்தைகளுக்கு, நல்ல தொடுதல் மற்றும் தவறான எண்ணத்தில் தொடுதல் குறித்தும், அவ்வாறு தவறான எண்ணத்தில் தொடும் நபர்களிடம் இருந்து உடனடியாக விலகிச் செல்வதுடன் பெற்றோர் அல்லது நமக்கு நம்பிக்கையான உறவினர், ஆசிரியர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று காட்சியாக விளக்கப்பட்டது. மேலும், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 - ஐ தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்து குழந்தைகளை பாதுகாக்கலாம் என்பது குறித்தும் விளக்கப்பட்டது.
தங்கள் பகுதியில் குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் குறித்து விவரம் தெரியவந்தால் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு எண் - 1098 க்கு தெரிவிக்கலாம். குழந்தைகளுக்கு பயமில்லாத வருங்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை இக் குறும்படம் ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.