நாமக்கல்லில், உலக மக்கள் தொகை தினத்தையொட்டி வியாழக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், விழிப்புணர்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் பங்கேற்று, பேரணியை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். முன்னதாக, உலக மக்கள்தொகை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பேரணியானது, மருத்துவமனையில் தொடங்கி மணிக்கூண்டு, திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் சாலை வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது. இதில், தனியார் செவிலியர் கல்லூரி மாணவியர் கலந்து கொண்டு விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். பேரணியில் அரசுத் துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.