நாமக்கல் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
By DIN | Published On : 13th July 2019 09:58 AM | Last Updated : 13th July 2019 09:58 AM | அ+அ அ- |

நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில், பயணிகளுக்கும், பேருந்துகளுக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில், குத்தகை அடிப்படையில் 170 கடைகள் வரை உள்ளன. ஒன்பது ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் விடப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்வர். இவை தவிர, 50-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்திருந்தன.
இதனால், பேருந்துகளுக்கும், பயணிகளுக்கும் மிகவும் இடையூறாக இருக்கிறது என நகராட்சி ஆணையர் கே.எம்.சுதாவுக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின்பேரில், நகராட்சி வருவாய் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் சென்ற நகராட்சி துப்புரவு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். வாடகை செலுத்தாத, பேருந்து நிலையத்தை ஒட்டிய சாலையோரக் கடை உரிமையாளர்கள், வரும் திங்கள்கிழமைக்குள் வாடகை செலுத்தாதபட்சத்தில் அவை சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்பில் 30-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிக் கடைகள் அகற்றப்பட்டன.