குமாரபாளையத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கக் கோரி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், வெள்ளிக்கிழமை பரபரப்பு நிலவியது.
குமாரபாளையத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இப் பிரிவில் பயிலும் மாணவியர் தங்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
ஆனால், தமிழக அரசு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கினால் பெற்றுத் தரப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இப் பிரிவில் பயிலும் மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்குவது சாத்தியமில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், ஏமாற்றமடைந்த மாணவியர் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
தொடர்ந்து, குமாரபாளையம் - சேலம் சாலையில் அமர்ந்து புத்தகப் பைகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தேவி மற்றும் போலீஸார் சமரசப் பேச்சு நடத்தியதோடு, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். இதனால், மாணவியர் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.