கொடி நாள் நிதியாக ரூ.1.54 கோடி வசூலித்து நாமக்கல் மாவட்டம் சாதனை புரிந்ததையொட்டி, ஆட்சியருக்கு, முன்னாள் படைவீரர் நலன் சார்பில் வியாழக்கிழமை கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத் துறையின் சார்பில், கொடிநாள் வசூல் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் கொடிநாள் வசூலுக்காக அனைத்து துறைகளுக்கும் வழங்கப்பட்ட இலக்கு எட்டப்பட்டதா என்பது தொடர்பாக ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, 2016--ஆம் ஆண்டுக்கான கொடிநாள் வசூலில் ரூ.5 லட்சத்துக்கு மேல் வசூல் புரிந்தமைக்காக வெள்ளிப் பதக்கம் மற்றும் ஆளுநரின் பாராட்டுச் சான்றிதழ்களை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் ர.ஜெயந்தி, மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) ரா.ரவி ஆகியோருக்கும், ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூல் புரிந்தமைக்காக வெள்ளிப் பதக்கம் மற்றும் தலைமைச் செயலாளரின் பாராட்டுச் சான்றிதழ்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆர்.வெங்கடேசன், கே.எஸ்.துரைசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பொ.பாலமுருகன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் சி.சசிகுமார், முதன்மை கல்வி அலுவலர் ப.உஷா, மோட்டார் வாகன ஆய்வாளர் ப.சதாசிவம், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட இணைப் பதிவாளர் ச.யசோதாதேவி உள்ளிட்ட 7 அரசுத் துறை அலுவலர்களுக்கும், ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இக் கூட்டத்தில், 2017-ஆம் ஆண்டுக்கான படைவீரர் கொடிநாள் வசூலாக ரூ.1 கோடியே 54 லட்சத்து 33 ஆயிரம் இலக்கை எய்தமைக்காக, முன்னாள் படைவீரர் நலத் துறையின் இயக்குநர் சார்பில் வெள்ளி சிறப்பு கேடயம் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், நாமக்கல் சார்- ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் சி.ராமகிருஷ்ணன், துணை ஆட்சியர் (பயிற்சி) பெ.பிரேமலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.