நாமக்கல்லில், அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லீலாதரன் தலைமை வகித்தார். அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க செயலாளர் ரகுகுமரன், இந்திய மருத்துவர் சங்க நாமக்கல் கிளை தலைவர் மருத்துவர் பெ.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். எம்.சி.ஐ. விதிப்படி மட்டுமே அல்லாமல், நோயாளிகளின் சேவைக்கு ஏற்ப மருத்துவர்கள் பணியிடங்களை அரசாணையில் கூறியபடி அமல்படுத்த வேண்டும். அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும். சுகாதாரத்தின் அடித்தளம் காத்திட, அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லீலாதரன், அரசு எங்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்காதபட்சத்தில, வரும் 15, 16 ஆகிய இரு நாள்கள் சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும், வரும் 18-ஆம் தேதி அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.