பரமத்தி வேலூர் வட்டம்,பொத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து காப்பது குறித்த விழிப்புணர்வு குறும்படம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வியாழக்கிழமை
ஒளிபரப்பப்பட்டது.
நாமக்கல் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அதிநவீன மின்னணு திரை காட்சி வாகனத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த குறும்படத்தில் ஆண், பெண் குழந்தைகளிடம் பேசுபவர்கள், பழகுபவர்கள், தவறான எண்ணத்தோடு தொட்டு பேசுபவர்களின் விதம் குறித்தும், அவர்களிடம் பேசும் விதம் குறித்து குறும்படம் மூலம் காட்சிப் படுத்தப்பட்டது. மேலும், தவறான நபர்கள் குறித்து ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் நம்பிக்கையான உறவினர்களிடம் புகார் தெரிவிப்பது குறித்து குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் செயல்கள் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1098-க்கு உடனடியாக தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என குறும்படம் மூலம் அறிவுரை வழங்கப்பட்டது. இந்த குறும்படத்தை மாணவ, மாணவிகள்,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.