ராசிபுரம் அருகேயுள்ள வேலம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) மு.ஆ.உதயகுமார் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து நேரில் கேட்டறிந்தார். மேலும், சத்துணவின் தரம், முறையாக வழங்கப்படுகிறதா, முட்டை விநியோகம் போன்றவை குறித்தும் சத்துணவு திட்ட பணியாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் சுகாதாரமாகவும், குறிப்பிட்ட நேரத்திலும் சத்துணவு தயாரித்து முறையாக வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்தும், கற்பித்தல் முறைகள் குறித்தும் ஆசிரியர்கள், மாணவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் கல்வி துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.