ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிங்களாந்தபுரம் அரசு தொடக்கப்பள்ளி போன்ற பள்ளிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.ரவி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட பள்ளி கல்வி அலுவலர் (பொறுப்பு) மு.ஆ.உதயகுமார், மாவட்ட பள்ளிகளின் துணை ஆய்வாளர் சந்திரசேகர், ராசிபுரம் வட்டார கல்வி அலுவலர் ஆர்.வெங்கடாஜலம், ரோட்டரி மாவட்ட அறக்கட்டளைத் தலைவர் கே.பாபு, ராசிபுரம் ரோட்டரி சங்கச் செயலர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சர்வதேச ரோட்டரி நிதி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியருக்கு கை கழுவுதலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சோப்புகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவியருக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, நாப்கின்கள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு பேனர்கள், ஸ்டிக்கர்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. அமெரிக்கா கலிபோர்னியா மாநில சான்ட்ரோ நகரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி காஸ்வி உதயகுமார் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான இப் பொருள்களை மாணவ, மாணவியருக்கு வழங்கினார். இந் நிகழ்வில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜி.தினகர், எஸ்.கதிரேசன், கே.குணசேகர், தர்மலிங்கம், தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.