தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். இதில், 2019-20-க்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடியில் நியமனம் செய்யப்பட்ட இளநிலை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளான ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.